New Smart Tamil Logo with Stroke

இயற்கை அனர்த்தங்கள் | Natural disasters in Tamil

Natural disasters in Tamil

உலகில் தினமும் பல்வேறு துறைகளில் புதுப் புது தொழினுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இயற்கைக்கு முன்னால் மனிதனின் தொழினுட்பத்தின் மூலம் தாக்குபிடிப்பது கடினம் தான்.

சில இயற்கை அனர்த்தங்கள் (Natural disasters in Tamil) நிகழ்வதற்கு மனிதனே காரணமாகின்றான். இயற்கை வளங்கள் சீரழிவுக்கு உட்பட்டு இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுவதன் விளைவாகவும் சில அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பெரும்பாலான இயற்கை அனர்த்தங்கள் (Natural disasters in Tamil) இயற்கையாகவே நிகழ்கின்றன. இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக உலக நாடுகளில் பல தொழினுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இருந்தபொழுதிலும், சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ஏற்படும் விளைவுகளால் பெருமளவு இழப்புக்களும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இயற்கை அனர்த்தங்கள் (Iyarkai anarthangal) பற்றி இனி விரிவாகப் பார்ப்போம்.

இயற்கை அனர்த்தங்கள் என்றால் என்ன?

புவியில் பௌதீகச் சூழலினால் தானாகவே அல்லது இயற்கையாகவே மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஏற்படும் விளைவுகள் இயற்கை அனர்த்தங்கள் (Natural disasters in Tamil) எனப்படும்.

அதாவது, மனித செயற்பாடுகளினால் ஏற்படும் சூழல் மாற்றத்தின் விளைவாக உண்டாகும் தீங்கான நிகழ்வுகளையே  இவ்வாறு அழைப்பர்.

இது 3 வகைப்படுகிறது. உயிரியல் அனர்த்தம், புவிப்பௌதீகவியல் அனர்த்தம், காலநிலை அல்லது வானிலை அனர்த்தம் எனப்பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வனர்த்தங்களை 6 பிரிவுகளாக சர்வதேச இயற்கை அனர்த்த தரவுத்தளம் வகைப்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அவைகளாவன:-

  1. புவிப் பௌதீகவியல் அனர்த்தங்கள்
  2. வளிமண்டலவியல் அனர்த்தங்கள்
  3. நீரியல் அனர்த்தங்கள்
  4. காலநிலையியல் அனர்த்தங்கள்
  5. உயிரியல் அனர்த்தங்கள்
  6. புவிவெளிக்காரணி அனர்த்தங்கள் என்பனவாகும்.

மேலும், இயற்கையாக நடைபெறுகின்ற ஒரு நிகழ்வினால் மனிதன் ஏனைய உயிரினங்கள் உட்பட சூழலுக்கோ, சூழலிலுள்ள உடமைகளுக்கோ கேடு ஏற்படுகின்ற போது அவ்வாறான தருணத்தை இயற்கை அனர்த்தங்கள் (Natural disasters in Tamil) என பொதுவாக சுருக்கிக் கூறலாம்.

இயற்கை அனர்த்தங்கள் (Natural disasters in Tamil) எவையென நோக்கின் சுனாமி, சூறாவளி, சுழல்காற்று, தொடர்மழை, வெள்ளம், மண்சரிவு, வறட்சி, பனிப்பொழிவு அல்லது பனிப்பாறை சரிவு, பூகம்பம், காட்டுத்தீப்பரவல், இடி மின்னல் தாக்கம் என்பனவற்றை கூறலாம்.

சர்வதேச இயற்கை அனர்த்த தரவுத்தளம் கூறியதன் அடிப்படையில் இனி விரிவாகப் பார்ப்போம்.

1. புவிப் பௌதீகவியல் அனர்த்தங்கள் 

Natural disasters in Tamil
Natural disasters in Tamil

புவிப் பௌதீகவியல் அனர்த்தங்கள் என்றால் திண்மப் புவிப்பாறைகளின் மூலம் நிகழ்கின்ற அனர்த்தங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, நிலநடுக்கம், எரிமலை வெடிப்புச் செயற்பாடுகள் மற்றும் பருப்பொருள்களின் அசைவு என்பவற்றை கூறலாம்.

எம்மைச் சுற்றி உள்ள சூழலில் அசைகின்ற திண்ம, திரவ மற்றும் வாயுவிலான அனைத்தும் பருப்பொருள்கள் எனப்படும்.

நிலநடுக்கம்

பூமிக்கடியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு சக்தி வெளியேற்றப்பட்டு பூமித் தட்டுகள் அசைவதினால் அல்லது நகர்வதனால் இடம்பெறும் அதிர்வு நிலநடுக்கம் எனப்படும்.

இதை நில அதிர்வு, பூமியதிர்ச்சி, பூகம்பம் என்றும் கூறலாம். நில அதிர்வை நிலநடுக்கமானியினை கொண்டு அறியலாம். இதன் அளவை ரிக்டர் அளவு என அழைப்பர்.

நில நடுக்கத்தின் தாக்கத்தை பொருத்தவரையில், 3 ரிக்டருக்கு குறைவாக நில நடுக்கங்கள் இருப்பின் அதை உணர்வது கடினமாகும். அதேபோல, நில நடுக்கங்கள் 7 ரிக்டருக்கு அதிகமாக இருந்தால் அதன் தாக்கத்தால் ஏற்படும் விளைவு பல மடங்கு அதிகமாக இருக்கும்.

உதாரணத்திற்கு, 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் ரிக்டர் அளவு 9.1 ஆக இருந்தது. அதனால் ஏற்பட்ட தாக்கத்தை எம்மால் இன்னும் மறக்க முடியாது.

பூமியின் மேற்பரப்பானது பெரிய பாளங்களாக அமைந்து காணப்படுகிறது. மேலும், இவை நகரக்கூடிய அல்லது அசையக்கூடிய நிலத்தட்டுகளாக அல்லது நிலத்தகடுகளாக இருக்கின்றன.

இந்நிலத்தட்டுக்கள் நிலப்பரப்பிலும் நீரின் அடியிலுமாக அமைந்துள்ளன. இவ்வாறு 7 நிலத்தட்டுக்கள் பாரியனவாகவும் 12 சிறியனவாகவும் காணப்படுகின்றன.

இப்பெரிய நிலத்தட்டுக்களில் 5 கண்டங்களும் பசுபிக் முதலான கடல் பகுதிகளும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலத்தட்டுக்களின் பருமனைப் பார்ப்பின், இவை சுமார் 80km வரை தடிப்பம் கொண்டதாக அமைந்திருக்கும்.

இத்தட்டுக்களின் நகர்வானது ஒரு வருடத்திற்கு சுமார் 1cm முதல் 13cm வரை காணப்படும். இந்நகர்வின் போது ஏற்படும் லேசான உராய்வு கூட நில அதிர்வை ஏற்படுத்த வல்லன.

புவித்தட்டு அசைவுகளின் அடிப்படையில் நில நடுக்கத்தை 3 வகையாகப் பிரிக்கலாம்.

  1. சாதாரண முறை
  2. மேற்தள்ளல் முறை
  3. சமாந்தர முறை அசைவு என பிரிக்க முடியும்.

ஒவ்வொரு வருடமும் சுமார் 500,000 நில நடுக்கங்கள் பூமியில் ஏற்படுவதாகவும் அவற்றில் சுமார் 100,000 நில நடுக்கங்கள் மனிதனால் உணரப்படுகின்றனவாகவும் சொல்லப்படுகிறது.

90% இற்கு அதிகமான புவி நடுக்கங்கள் பசுபிக் சமுத்திரத்தை அண்மித்த பிரதேசங்களிலேயே உருவாகின்றதாக கூறப்படுகிறது.

நில நடுக்கத்தின் காரணமாக ஏராளமான உயிர்ச்சேதங்கள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குடியிருப்புக்கள் சரிந்து உடைந்து வீழ்தல், பாரிய அடுக்குமாடி தொடர்கள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து வீழ்தல், இதனால் மனிதன் இடிபாடுகளுக்குள் சிக்கி புதையுண்டு போதல், உயிரிழத்தல், உடல் உறுப்புக்களை இழத்தல் மற்றும் ஏனைய உயிரினங்கள் இறத்தல் போன்ற பாதிப்புக்கள் நிகழ்கின்றமை குறிப்பிடவேண்டிய விடயங்களாக உள்ளன.

எரிமலை வெடிப்பு

பூமியை உட்கரு, மையக்கரு அல்லது நடுப்பகுதி, புறப்பகுதி என 3 ஆகப் பிரிக்கலாம்.

புவியின் மேற்பரப்பில் இருக்கும் பெரும் தொடர் அழுத்தத்தின் காரணமாக மையப்பகுதியில் எப்பொழுதும் வெப்பநிலை அதிகமாகவே காணப்படும்.

இவ்வாறு தொடர்ந்து அழுத்தம் ஏற்பட்டு மையப்பகுதி வெப்பமாகி பாறைக்குழம்பு அல்லது மெக்மா (Megma in Tamil) உருகி அதன் அளவு அதிகரித்து, இதனால் உருவாகும் வாயுவின் அழுத்தம் காரணமாகவும் மெக்மா புவியின் மேற்பரப்பை துளைத்துக் கொண்டு பீரிட்டுக் கொண்டு வெளிவருவதே எரிமலை வெடிப்பு எனப்படும்.

எரிமலைகளை 3 வகையாக பிரிக்கலாம்.

1. உயிருள்ள எரிமலை

இவ்வெரிமலை சில கால இடைவெளியில் வெடித்து பாறைக்குழம்பை தள்ளக்கூடியன. கால இடைவெளி எடுப்பின், நிச்சயமாக செயற்படக்கூடிய எரிமலைகளையே இவ்வாறு அழைப்பர்.

2. உறங்கும் எரிமலைகள்

இவ்வெரிமலைகள் வெகு காலமாக அமைதியாக இருப்பவை. அதாவது, வெடிப்பு நிகழ்வு இடம்பெறாமல் அமைதியாக சில காலமாக கிடக்கும். ஆனால், எந்த நேரத்திலோ பாறைக் குழம்பை கக்கும் வல்லமை உடையன.

3. இறந்த எரிமலைகள்

இந்த வகை எரிமலைகள் மிகப் பழமையானவை. மீண்டும் உயிரி பெற முடியாத நிலையில் காணப்படுவன. அதாவது, திரும்பவும் வெடிப்பை ஏற்படுத்த வல்லமை அற்ற எரிமலைகளை இவ்வாறு கூறுவர்.

வெடிக்காது என உறுதிசெய்யப்பட்ட மலைகள் இவ்வகையினுள் அடங்கும்.

எரிமலை வெடிப்பதால் காற்று மண்டல மாசடைவு, மனித உயிரிழப்பு, குடியிருப்புக்கள் பாதிப்படைதல், சூழல் மாசடைதல் போன்ற கெடுதிகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

நிலச்சரிவு அல்லது மண்சரிவு

இது ஒரு புவியியல் செயற்பாடாகும். புவியில் காணப்படும் பெரும் பாறைத் துகள்கள் சிதைவடைதலுக்கு உட்பட்டு கீழே விழுதல் அல்லது சரிவடைவது மண்சரிவாகும். இது மானிட காரணி மற்றும் இயற்கை காரணிகளால் நிகழும்.

மனித காரணங்களை பார்ப்பின் காடழித்தல், முறையற்ற பயிர்ச்செய்கை, முறையற்ற நிர்மாணப்பணிகள் என்பனவால் சரிவுகள் ஏற்படும்.

இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து சாதனங்களால் ஏற்படும் அதிர்வுகள், குண்டு வெடிப்புக்கள், மண் அகழ்வு அல்லது தோண்டல் பணிகள், சுரங்கத் தொழில் என்பவற்றால் நிலச்சரிவு ஏற்படும். இவை மனித செயற்பாடுகளாக காணப்படுகின்றன.

இதனால், நிலச்சரிவில் சிக்கி மனித உயிர்கள் பறிபோகும்; இடிபாடுகளிலும்  மண்ணுக்குள்ளும் புதையுண்டு மனித உயிர்கள் பறிபோகும். ஏனைய உயிர்களும் காவுகொள்ளப்படும்.

புதையுண்டு காணாமல் போகும் சந்தர்ப்பங்களும் உண்டு. குடியிருப்புக்கள், கட்டிடங்கள் புதையுண்டு போதல்; உடைந்து சிதைந்து போதல்; உடமைகள் அழிதல் போன்றன பாதிப்புக்களாக நிகழ்கின்றன.

இயற்கை காரணங்களை பார்ப்போம் எனில், நில நடுக்கம், எரிமலை வெடிப்பு, மலைச் சாய்வுகளில் ஓடும் தரைக்கீழ்நீர், கடும் மழை என்பன காணப்படுகின்றன.

2. வளிமண்டலவியல் அனர்த்தங்கள்

Natural disasters in Tamil
Natural disasters in Tamil

குறிப்பிட்டதொரு குறிகிய அல்லது சிறிய காலத்திற்குள் வளிமண்டல நிலமைகள் மாற்றம் அடைந்து குழப்பமான வானிலை ஏற்பட்டு, இதனால் அனர்த்தங்கள் நிகழ்வதை இவ்வாறு கூறுவர்.

எடுத்துக்காட்டுகளாக மின்னல், புயல், சூறாவளி, அதிக சூழல் வெப்பம் என்பனவற்றை கூறலாம்.

சூழல் அதீத வெப்பமாவதால் சூடு அதிகரிக்கும், நீர் நிலைகள் வறண்டு போகும், ஈரலிப்புத் தன்மை காணப்படாது. இதனால், சுற்றாடலில் மனிதன் மற்றும் ஏனைய உயிரினங்களால் வாழ இயலாது போகும்.

உயிரிழப்புக்கள் ஏற்படும், காற்று வெப்பமாகும். இவ்வாறு பல பாதிப்புக்கள் ஏற்படும்.

மின்னல்

மின்னல் அனர்த்தத்தை பார்ப்பின், சிறிய பாதிப்புக்களை அடிக்கடி உருவாக்குகின்ற ஓர் அனர்த்தமாக மின்னல் தாக்கம் இருக்கிறது.

புவியிலே அடிக்கடி நிகழும் குழப்பமான காலநிலை காரணமாக தற்போது மின்னல் பாதிப்பும் கூடிக் கொண்டே செல்கின்றது எனலாம்.

மழைக் காலங்களில் அடிக்கடி மின்னல் தாக்கங்களைக் காணலாம். மேற்காவுகை மழை, சூறாவளி காற்று மழை என்பன ஏற்படும் காலங்களில் அதிகமாக மின்னற்றாக்கங்களைப் பார்க்க முடியும்.

ஏற்றம் பெற்ற முகில்களிலிருந்து ஏற்றமற்ற ஏனைய அல்லது  இன்னொரு முகிலுக்கோ, நிலத்திற்கோ கூடியளவிலான மின்னேற்றம் பாயும் சந்தர்ப்பங்களில் மின்னல் உருவாகும்.

இதன்போது ஏற்படுகின்ற ஒளியே மின்னலாக கருதப்படுகிறது. பெரிய அளவிலுள்ள மின்னேற்றமொன்று நிலத்தை அல்லது முகில் உள்ள திசையை நோக்கி பாய்தல் மின்னிறக்கம் எனப்படும்.

வானில் பரந்து காணப்படும் முகில்கள் உள்ள திசையை நோக்கி காற்று பலமாக வீசுகையில் அம்முகிலிலுள்ள அணுக்கள் ஒன்றோடொன்று உரசுவதன் மூலம் முகில்கள் மின்னேற்றத்திற்கு உட்படுகின்றன.

ஒரு முகிலை எடுத்துக்கொண்டால், அதன் மேற்பகுதி நேர் ஏற்றத்தையும் கீழ்ப்பகுதி மறை ஏற்றத்தையும் கொண்டு இருக்குமாம்.

இவ்வாறு கூடுதல் மின்னேற்றங்கள் மின் பரிமாற்றத்திற்கு முனைகையில் மின்னல் ஏற்படுகிறது. இவை 3 வகைப்படுகின்றன.

1. முகில்களுக்கிடையிலான மின்னிறக்கம்

முகில் கூட்டங்களுடன் இணைந்து ஏற்படும் மின்னிறக்கம் இவ்வாறு அழைக்கபடுகிறது.

2. முகில்களில் இருந்து புவிக்கு ஏற்படும் மின்னிறக்கம்

ஏற்றம் கொண்டதொரு முகிலிலிருந்து மின்னேற்றம் ஆனது பூமியை நோக்கி பாய்வது இவ்வாறு கூறப்படுகிறது.

3. முகிலிலிருந்து வளிக்கு ஏற்படும் மின்னிறக்கம்

மின்னேற்றம் கொண்ட முகிலிலிருந்து மின்னேற்றமானது வளியை நோக்கி பாய்தல் அவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

இதனடிப்படையில், இவை முகில் மின்னல், புவி மின்னல், வளி மின்னல் என 3 வகைப்படும். இவற்றில் புவி மின்னலே புவி மேற்பரப்பில் அதிகப்படியான ஆபத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த வல்லன.

மின்னலானது மிக உயர்ந்த பிரதேசங்களில் அல்லது திறந்த வெட்ட வெளி பிரதேசங்களில் இருக்கும் மனிதர்களையோ, கட்டிடங்களையோ, உயர்ந்த மரங்களையோ நேரடியாக தாக்கத்திற்கு உட்படுத்துகின்றது. இது நேரடி மின்னல் தாக்கம் எனப்படும்.

தொடுகை மின்னல் தாக்கம்

மின்னல் வெட்டும் போது தொலைப்பேசி பயன்படுத்தல், மின்கம்பிகள், அண்டனாவை தொடல், மற்றும் மரங்கள், மனிதர்கள் என்பன ஊடாக உயர்ந்த கட்டிடங்களோடு தொடர்புபட்டு காணப்படின் அத்தொடுகை மூலம் தொடர்பிலுள்ள மனிதர், உடமைகளை மின்னல் தாக்குமாயின் அது தொடுகை மின்னல் தாக்கம் எனப்படும்.

பக்கப்பாய்ச்சல் மின்னல் தாக்கம்

உயர்ந்த மரங்களின் மீது பாய்கின்ற மின்னலானது தொடுகை அற்றதும், அருகில் காணப்படுகின்றதுமான மனிதர்களையோ, கட்டிடங்களையோ தாக்குவது பக்கப்பாய்ச்சல் மின்னல் தாக்கம் எனப்படும்.

படிமுறைப் பாய்ச்சல் மின்னல் தாக்கம்

உயர்ந்த மரத்தையோ கட்டிடத்தையோ நோக்கி பாய்ந்த மின்னலானது தரையில் நிற்கும் மனிதனின் ஒரு காலினூடாக உடலுக்கு கடத்தப்பட்டு மறுகாலின் ஊடாக வெளியேறப்படல் படிமுறைப் பாய்ச்சல் மின்னல் தாக்கம் எனப்படும்.

சூறாவளி

காற்றானது தான் இயல்பாக வீசும் வேகத்தை விட பலமாகவும் தாக்கத்தோடும் வீசினால் அது புயலாக சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு மணித்தியாலத்திற்கு 63km தொடக்கம் 87km வரை வேகத்தில் காற்று வீசும் எனில், அது புயலாக கணிக்கப்படுகிறது.

சூறாவளி என்பது ஒரு வகை சுழன்று வீசும் பலத்த காற்றாகும். இது கட்டுக்கடங்காத வேகத்தில் இடஞ்சுழியாக அல்லது வலஞ்சுழியாக சுழன்று வீசும் காற்றாகும்.

சூறாவளிகள் குறைந்த பட்சமாக சுமார் மணித்தியாலத்திற்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்று வீசவல்லனவாம். அதாவது, ஒரு மணித்தியாலத்திற்கு 64km வேகமாக கூறப்படுகிறது.

அதிக பட்சமாக ஒரு மணித்தியாலத்திற்கு 110 மைல்கள் வேகமாக சுழன்று அடிக்கும். அதாவது, 177km வேகம் எனும் அளவில் பலத்த காற்று வீசும்.

இந்த வேகமானது கிட்டதட்ட 250 அடி (76m) நிலப்பரப்பினை ஒரு விநாடியில் பாதிக்கவல்ல சக்தியை படைத்தது.

ஏதாவது ஒரு பக்கத்திலிருந்து அல்லது திசையில் இருந்து வீசுகின்ற குளிர்ந்த காற்றும் வறண்ட காற்றும் அதன் எதிரான திசையிலிருந்து அல்லது பக்கத்திலிருந்து வீசுகின்ற வெப்பமான காற்றும் ஈரப்பதனான காற்றும் ஒன்றுடன் ஒன்று மோதும்.

இவ்வாறு பலவகையான காற்றுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது, அதன் மூலம் வெளியாகும் விசையே சூறாவளி என்று சொல்லப்படும்.

இந்நிகழ்வு அதிகமான அளவில் நிகழுகின்ற போது பலம் கூடி பாரிய சூறாவளியாக மாறுகின்றது.

இவ்வாறு ஏற்படும் புயல் காற்று, சூறாவளி என்பவற்றால் மனிதர்கள், பிற உயிரினங்கள் என அனைத்தும் தூக்கி வீசப்பட்டு பாதிப்படைகின்றன. அதுமட்டுமன்றி, குடியிருப்புக்கள், கட்டிடங்களின் கூரைகள் தூக்கியெறியப்படும்.

சில நேரங்களில் வாகனங்கள், பொருட்கள் என்பனவும் காற்றின் வேகத்திற்கும் பலத்திற்கும் தாக்கு பிடிக்க முடியாமல் தூக்கி வீசப்படுவதையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

இத்தகைய பயங்கர அனர்த்தத்தினால் உயிர் இழப்புக்கள், உடமை இழப்புக்கள், பொது சொத்துக்கள் நாசமாதல் போன்ற விபரீதங்கள் ஏற்படுகின்றன.

மேலும், இதன்போது மின்னலும் ஏற்பட்டு தாக்கங்களை உருவாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

3. நீரியல் அனர்த்தங்கள்

Natural disasters in Tamil
Natural disasters in Tamil

பூமியின் மேற்பரப்புக்கு கீழே அல்லது வளிமண்டலத்தில் நீரின் தரம், விநியோகம், நகர்வு என்பவற்றில் திடீரென நிகழ்கின்ற தீவிரமான தீங்கான மாற்றங்கள் நீரியல் அனர்த்தங்கள் எனப்படும். சுனாமி, வெள்ளப்பெருக்கு என்பவற்றைக் குறிப்பிடலாம்.

சுனாமி

நிலத்தட்டுகளுக்கிடையில் நகர்வு ஏற்பட்டு அதன் காரணமாக உராய்வுக்குற்பட்டு நிலநடுக்கம் உருவாகி பின் கடல் உள்ளீர்க்கப்பட்டு அதே வேகத்துடன் அலைகள் மேல் எழுந்து வீசப்படுதல் சுனாமி எனப்படும்.

சுனாமியின் போது அலைகள் பேரலைகளாக மலை போல் மேல் எழும்பி பாதிப்பை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக 2004 இல் ஏற்பட்ட சுனாமியை கூறலாம்.

உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிய பலர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியானர். இடிபாடுகளில் சிக்கியும் புதையுண்டும் பலர் இறந்தனர்.

அலை நீரில் சிக்கி மூச்சுத் திணறி எண்ணற்ற மனிதர்கள் இறந்தனர். மேலும், ஏனைய உயிரினங்களும் உயிரை விட்டமை குறிப்பிடத்தக்கது.

உறவுகளை இழந்து, குடும்பங்களை இழந்து எண்ணற்றோர் நிர்க்கதியாக நின்றமை நினைவூட்டத்தக்கது.

மேலும், பொது சொத்துக்கள், தனியார் உடமைகள் என அனைத்தும் முற்றிலும் அழிக்கப்பட்டன. நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப்போட்டது எனலாம் இச்சுனாமி.

வெள்ளப்பெருக்கு

ஆறு அல்லது ஏரி போன்ற நீர்நிலைகளிலுள்ள நீரானது மிகையாகி நிலத்தை மூழ்கடிக்குமளவுக்கு தேங்கி நிற்றல் அல்லது பொங்கி பாய்ந்தோடுதல் வெள்ளப்பெருக்கு எனப்படும்.

நீரின் அளவு அதிகரித்து வலிமை பெருகி கரையை உடைத்துக் கொண்டு ஓடும் போது பலவிதமான கேடுகள் நிகழும்.

பாலங்கள், கட்டிடங்கள் உடைதல், குடியிருப்புக்கள் மூழ்குதல், சாலைகள் மூழ்குதல், கழிவுநீர் மற்றும் குடிநீர் வடிகாலமைப்புகள் பாதிப்படைதல் என்பன நிகழும் தீங்குகள் ஆகும்.

மேலும், மனிதர்கள் உட்பட ஏனைய உயிரினங்கள் நீரில் மூழ்கி இறக்க நேரிடும், இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும். அத்தோடு, தொற்றுநோய்களும் நீரால் பரவக்கூடிய நோய்களும் ஏற்படும்.

விவசாய பயிர்ச் செய்கை நிலங்கள் பாதிப்படைதல், பொருளாதார ரீதியிலான சுற்றுலாத்துறை பாதிப்பு போன்றன மேலும் நிகழும் பாதகங்கள் ஆகும்.

மழை

இயற்கை அனர்த்தங்களில் மழையும் குறிப்பிடத்தக்கது. குறையாது பெய்யும் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படுதல் மிக முக்கியமானதொன்றாகும்.

இதனால், உயிர் ஆபத்துக்கள் பெரும் சேதங்கள், சூழல் மாசடைவு, நீர் தேங்கி நோய்கள் பரவுதல் என்பன ஏற்படுகின்றன. மேலும், இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.

4. காலநிலையியல் அனர்த்தங்கள்

Natural disasters in Tamil
Natural disasters in Tamil

நீண்ட கால அடிப்படையில் வளிமண்டல நிலமைகளின் காரணமாக ஏற்படுகின்ற அனர்த்தங்கள் காலநிலையியல் அனர்த்தங்கள் எனப்படும். எடுத்துக்காட்டாக வறட்சி, காட்டுத் தீ என்பவற்றைக் கூறலாம்.

வறட்சி

நீண்ட காலத்திற்கு மழை வீழ்ச்சியே இல்லாமல் போய் காய்ந்த நிலைமை ஏற்படுதல் வறட்சி எனப்படும். இவ்வறட்சியை பாதிப்பு மற்றும் காலவரையறையின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக வகுக்கலாம்.

  1. வானிலை சார் வறட்சி
  2. விவசாய வறட்சி
  3. நீரியல் சார் வறட்சி
  4. சமூகப் பொருளாதார வறட்சி என பிரிக்க முடியும்.

மழை இல்லாமல் போய் வெப்பம் அதிகரித்து, நிலத்தின் ஈரப்பதன் முழுமையாக அற்றுப் போய் பயிர் செய்ய முடியாத நிலை தோன்றுதல், ஆறுகள், குளங்கள், ஓடைகள் ,வாவிகள் போன்ற நீர் நிலைகள் வரண்டு காய்ந்து போதல், குடிநீர் இல்லாமல் போதல், சுற்றாடலில் அதிக வெப்பம் ஏற்படல், பசி பஞ்சம் என்பன உருவாகுவதற்கு காரணமாக அமையும். இதனால் உயிரிழப்புக்கள், போசனைக் குறைபாடு நோய் ஏற்படல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இதையும் வாசிப்போம்: 

காட்டுத் தீ

சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், வெயிற் காலத்தில் மரங்கள் உராய்வுக்கு உட்படுதல் போன்ற காரணங்களினால் காடுகளில் கட்டுக்கடங்காமல் பற்றும் தீயே காட்டுத் தீ எனப்படும்.

இது வேகமாக பரவிச் செல்லக் கூடியது. காட்டுத் தீ ஏற்பட இயற்கை காரணிகளாக மின்னல், அதிக வெப்பம் சூழலில் ஏற்படல், எரிமலை வெடிப்பு என்பன காணப்படுகின்றன.

மனித காரணங்களாக விவசாயத்திற்காக காடுகளுக்கு தீ வைத்தல்,முறையற்று வீசப்படும் சிகரெட் துண்டுகள், இயந்திரங்களில் இருந்து வெளியாகும் தீப்பொறி, மின்சாரக் கோளாறுகள் என்பன காணப்படுகின்றன.

இதனால், உயிர்சேதங்கள் ஏற்படுவதோடு, சூழல் மாசடைவும் ஏற்படும். காட்டுத் தீ சுற்றி உள்ள அனைத்தையும் கரியாக்கிவிடும், சூழலில் கார்பனின் அளவை கூட்டும், வாயுவை மாசுபடுத்தும் என்பன குறிப்பிடத்தக்கன.

இதையும் வாசிக்க:

5. உயிரியல் அனர்த்தங்கள்

உயிர் உள்ள அங்கிகளுடைய செயற்பாடு காரணமாக அல்லது அவற்றிடம் உள்ள நச்சுப் பொருட்கள் காரணமாக ஏற்படும் அனர்த்தங்கள் அல்லது அவைகளால் பரவும் தொற்றுக்கள் மூலம் ஏற்படும் விளைவுகள் உயிரியல் அனர்த்தங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டாக, விலங்குகளினால் அல்லது அவற்றின் தாக்குதலால் ஏற்படும் ஆபத்துக்கள் என்பவற்றை கூறலாம் (யானைத் தாக்கம், பாம்புகடி, பூச்சி கடி). தொற்றுநோய்கள் பரவுதலையும் கூறலாம்.

இதனால், உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் என்பன ஏற்படும். உதாரணமாக, யானைத் தாக்குதலைக் கூறலாம். மனிதனின் உயிர் போதல், கட்டிடங்கள் உடைக்கப்படல், விவசாய பயிர்ச்செய்கைகளை நாசமாக்கல் என்பன யானைத் தாக்குதலின் போது நிகழும்.

6. புவி வெளிக்காரணி அனர்த்தங்கள்

பூமியினுடைய எல்லையை கடந்து காணப்படுகின்ற விண்கற்கள், எரிகற்கள், வால்வெள்ளிகள் என்பன புவியருகே கடந்து செல்லல், புவி வளிமண்டலத்தினுள் புகுதல் மற்றும் கோள்கள் அசைவில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படுகின்ற விளைவுகள் புவி வெளிக்காரணி அனர்த்தங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டாக, அதிர்ச்சி அலைகள், மண் புயல், வளிமண்டல வெப்பநிலை மாற்றம் என்பவற்றைக் கூறலாம்.

இந்த அடிப்படையில் இயற்கை அனர்த்தங்கள் (Natural disasters in Tamil) பலவிதமாக நோக்கப்படுகின்றன. அதன் பாதிப்புக்களும் தாக்கங்களும் ஒவ்வொரு அனர்த்தத்திற்கு ஏற்ப வேறுபட்டும் ஒரே தன்மையினதுமாக காணப்படுகின்றமையும் எடுத்துக்காட்டத்தக்கது.

பெரும்பாலான இயற்கை அனர்த்தத்திற்கு மனித செயற்பாடுகளும் ஏதுவாக இருப்பதனால் அவற்றை முடிந்தவரை குறைப்பதால் அனர்த்தத்தை தடுக்க முனையலாம்.

இயற்கை என்பது விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷமாகும். அதன் சமநிலைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வரை, அது நாம் அனைவரையும் பாதுகாக்கும்.

ஆகவே நாம் இயற்கையை பாதுகாப்போம், நல்வாழ்க்கையை வாழ்வோம்.

மேலும் சில பயனுள்ள தகவல்கள்: 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top